செவ்வாய், 28 ஜூலை, 2009

சூடான் அரசுத் தலைவர் மீதான இனஅழிப்பு போர்க் குற்றம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள சூடான் அரசுத் தலைவர் மீதான இனஅழிப்பு போர்க் குற்றம்
[30 - July - 2008] தினக்குரல் நாளிதழ் மற்றும் தமிழ்நாதம் இணைய இதழில் பதிவான ஆய்வு

ரூபன் சிவராஜா


சூடான் அரசுத் தலைவர் ஓமர் ஹசன் அல் பசிர் மீது (GENOCIDE AND WAR CRIMES) இன அழிப்பு மற்றும் போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) இம்மாதம் 15 ஆம் திகதி இவ் ஆணையைப் பிறப்பித்துள்ளது.

சூடான் அரசுத் தலைவரைக் கைது செய்வதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் போது ஒரு நாட்டின் அரசுத் தலைவர் மீது இன அழிப்பு போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.

சேர்பியாவின் முன்னாள் அரசுத் தலைவர் ஸ்லோவடான் மிலோசவிச் மீது இவ்வாறு இன அழிப்பு மற்றும் போர்க் குற்றம் சுமத்தப்பட்டு அவர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். அவர் நெதர்லாண்ட் நாட்டின் ஹாக் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில் 2006 ஆம் ஆண்டு மரணமடைந்தார் என்பது பலரும் அறிந்ததே.

இவர் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்ட பின்னரே குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். அதேபோல போஸ்னியா ஹசகோவினா உள்நாட்டு யுத்தத்தின் போது நிறுவப்பட்ட சேர்பிய குடியரசின் (Republic Srpska) அரசுத் தலைவராகவிருந்த ரடோக்வான் கறாட்சிக் (Radocvan Karadzic) அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போஸ்னியா ஹசகோவினாவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் இவர் தலைமையில் படுகொலை செய்யப்பட்டனர். இப்பின்னணியில் 1995 ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தால் இவர் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால், 13 ஆண்டுகளாக உருமறைப்பு வாழ்க்கை நடத்தி வந்தவரை கடந்த வாரமே சேர்பிய காவல்துறை கைது செய்தது. எவரும் அடையாளம் காண முடியாதவாறு நீண்ட தாடி வளர்த்து, பெரிய மூக்குக் கண்ணாடி அணிந்து ஒரு தனியார் இயற்கை மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரை கைது செய்து ஹாக் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படி ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக சேர்பியா அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பிய இணைவதற்கு விண்ணப்பிப்பதற்குரிய நிபந்தனையாக இவ்விவகாரம் முன்வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போது இன அழிப்பு, போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள் அல் பசிர் நீண்ட காலமாக இராணுவத்திலிருந்த பின்னணியுடையவர். 1989 ஆம் ஆண்டிலிருந்து சூடான் அதிகார மையத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றார். அல் பசிர் இன் இராணுவ ஆட்சியில் நாடு முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாத "சரியா' சட்ட அமுலாக்கம் நடந்தேறியது.

தன் மீதான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எச்சரித்துள்ள அல் பசிர், அத்தீர்ப்பிற்கு பதிலடியாக டார்பரில் வன்முறைகள் மேலும் மோசமடைவதோடு இரத்த ஆறு ஓடும் எனவும் சூளுரைத்துமுள்ளார்.

சூடானின் டார்பர் பிரதேசத்து இனக் குழுமங்கள் மீதான இனப் படுகொலைகளைத் திட்டமிட்டு, அவற்றை வழி நடத்தியவர் அல் பசிர் என்ற பின்னணியில் அவர் மீது இக்குற்றம் சுமத்தப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்புறநிலையில் சூடானின் டார்பர் சிக்கல் தொடர்பான பின்னணியை நோக்குவது பொருத்தமுடையது.


டார்பர் சிக்கல்
சூடானின் மேற்குப் பிராந்தியத்தை அமைவிடமாகக் கொண்டுள்ள டார்பர் ஆறு மில்லியன் மக்கள் தொகையையும் 543,000 சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்டுள்ளது. இது அண்ணளவாக பிரான்ஸ் நாட்டின் மொத்தப் பரப்பளவுக்கு ஒப்பானது என்று சொல்லப்படுவது வழக்கம்.

வரலாற்று ரீதியில் நீண்ட காலமாக டார்பர் பிரதேச மக்கள் மீது இன, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வந்த போதும் 2003 ஆம் ஆண்டிலேயே அங்கு அடக்குமுறைக்கெதிரான ஆயுதப் போராட்டம் எழுந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு மில்லியன் கணக்கில் இடப்பெயர்வுகள் எனக்குறுகிய காலத்திற்குள்ளேயே பெரும் மனித அவலங்களை டார்பர் சந்தித்துள்ளது.

டார்பர் பிரதேச முதன்மைப் போராட்ட அமைப்பான சூடான் விடுதலை அமைப்பிற்கும் (SLM) சூடான் அரசாங்கத்திற்குமிடையிலான சமாதான உடன்படிக்கை 2006 ஆம் ஆண்டு மே மாதம் (06.05.2006) கைச்சாத்திடப்பட்டது. அனைத்துலக சமூகத்தின் கடும் அழுத்தங்களுக்கும் காலக்கெடுக்களுக்கும் மத்தியிலேயே நைஜீரிய தலைநகர் ஆபூஜாவில் மேற்படி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இவ்வுடன்படிக்கைகளின் பின்னணியில் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையில் 7,000 அமைதிப் படைகள் டார்பருக்கு அனுப்பப்பட்டன.

தொடர்ந்து ஐ.நா. தலைமையில் ஆபிரிக்க ஒன்றியத்தின் ஒத்துழைப்புடனும் 25,000 படைகளை அங்கு அனுப்புவதாக ஐ.நா.வினால் தீர்மானிக்கப்பட்டது. சூடான் அரசாங்கம் இம்முடிவுக்கு உடன்படவில்லை. இருந்த போதும் ஐ.நா. சார்பில் 9,000 படைகள் இதுவரை டார்பருக்கு அனுப்பப்பட்டுள்ளன.


வன்முறை வெடித்ததற்கான பின்னணி
டார்பர் பிரதேசமானது கறுப்பின மக்களையும் அரபு மக்களையும் கொண்டுள்ளது. Fur, Massaleit and Zaghawa ஆகிய மூன்று இன ரீதியிலான பின்னணிகளைக் கொண்ட கறுப்பின மக்களும் Baggara என்ற அரபு இன மக்களும் அங்கு வாழ்கின்றனர். 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நாடோடிகளாகச் சென்று அப்பிரதேசங்களில் குடியேறியவர்களே அரபு இனத்தவர் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

இங்கு டார்பர் முரண்பாட்டின் மூலம் யாதென்று நோக்குமிடத்து அது அரச ஒடுக்குமுறை அடக்குமுறை என்பதாகவே இருக்கின்றது. இஸ்லாமிய (அடிப்படைவாத) மேலாதிக்க சூடான் அரசு தென் சூடான் மக்களை எவ்வாறு ஒடுக்கியதோ அதே வகையில் தான் டார்பர் மக்களும் பொருளாதார அரசியல் ரீதியில் புறமொதுக்கப்பட்டார்கள்.


தென் சூடான் விவகாரம்
தென் சூடான் மக்களும் நீண்ட நெடுங்காலமாக இஸ்லாமிய அடிப்படைவாத மைய அரசினால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டார்கள். சூடான் மக்கள் விடுதலை அமைப்பின் (sudan people liberation movement) தலைமையில் இருபது ஆண்டுகளுக்கு மேலான விடுதலைப் போராட்டம் அங்கு நடைபெற்றது.

மிகவும் சிக்கலான பல கட்டங்களைத் தாண்டி 2005 ஆம் ஆண்டு சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை அமைப்பிற்குமிடையில் சமாதான உடன்படிக்கையினை (comprehensive peace Agreement, CPA) எட்ட முடிந்தது. சமாதான உடன்படிக்கைக்கமைவான இடைக்கால அரச ஒழுங்கு அமைக்கப்பட்டது.

ஆனால், சூடான் அரசாங்கத்தினால் இன்றைய சமாதான உடன்படிக்கை நேர்த்தியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாத சூழலே யதார்த்தமாகவுள்ளது. சமாதான உடன்படிக்கை முறிவடையும் அபாயம் தோன்றியுள்ளது. இந்நிலையில், இன்னும் 5 ஆண்டுகளில் தென் சூடான் மக்கள் மத்தியில் கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்பட்டால் தென் சூடான் பிரிந்து சென்று தனிநாட்டை அமைப்பதற்கு பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பர் என்று நம்பப்படுகின்றது.


டார்பர்: படுகொலைகளின் உச்சம்
சூடான் அரசாங்கம் டார்பரில் "யான்யாவீட்' என்ற ஆயுதக் குழுவினைப் பயன்படுத்தி கறுப்பின மக்களை கொன்றொழித்தது. உடைமைகளை அழித்தது. சொந்த இடங்களிலிருந்து கறுப்பின மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறான அத்துமீறல்கள் இன்னமும் தொடர்கின்றன.

யான்யாவீட் என்பது அரபுப் பின்னணியைக் கொண்ட ஆயுத வன்முறைக் குழுவாகும். சூடான் அரசாங்கத்தின் முழு அளவிலான ஆதரவுடனும் ஆசிர்வாதத்துடனும் தான் இந்த ஆயுதக்குழு இயங்குகின்றது. சூடான் அரசு, நிதியுதவி, ஆயுத உரிமைகளை வழங்கி கறுப்பின மக்கள் மீது இந்த ஒட்டுப்படைகளை ஏவிவிட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டிலேயே டார்பரில் வன்முறைகளும் படுகொலைகளும் உச்சமடைந்தன. 5 ஆண்டுகளுக்குள் மாத்திரம் இருநூறாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டும் பட்டினிச்சாவுகளுக்கும் உள்ளாகியுள்ளனரென ஐ.நா. தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் வரையான மக்கள் உள்நாட்டுக்குள்ளும் அயல் நாடான இடச்ஞீ இற்கும் இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்து தாக்கியழித்தல் போன்ற பல்வேறு கொடுமைகள் பட்டியலிடப்படுகின்றன.

தென் சூடான் சமாதான முயற்சிகளின் போதே, டார்பர் பிரதேசத்திற்குரிய தீர்வு பற்றியும் அங்கு தலைவிரித்தாடிய வன்முறைகளை நிறுத்துவதற்கும் கார்ட்டும் (ஓடச்ணூtணிதட்) அதிகார மையம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென அனைத்துலக சமூகம் வலியுறுத்தியது.

யான்யாவீட் ஒட்டுப்படை சூடான் அரசாங்கத்தின் வழிநடத்தலில் இயங்குகின்றது என்பதை அனைத்துலக சமூகம் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக கண்டித்துள்ளது. ஆனால், அந்தக் குழுவுடன் தமக்கு தொடர்பேதும் இல்லையென சூடான் அரசாங்கம் மறுத்துவந்துள்ளதோடு, அது ஒரு (கொள்ளைக்கார) பாதாள உலகக்குழு என்று தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


திட்டமிட்ட இன அழிப்பு அனைத்துலக சமூகம் பகிரங்க அறிவிப்பு
இந்நிலையில், டார்பர் பிரதேசத்தில் திட்டமிட்ட முறையில் இன அழிப்பு (சுத்திகரிப்பு) மேற்கொள்ளப்படுகின்றது. அது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும், சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை ஆகியன பகிரங்கமாக அழுத்தம் பிரயோகித்தன. சூடான் அரசாங்கத்தைக் கண்டித்தன.

அடிப்படையில் அமெரிக்கா சூடானை பயங்கரவாத அரசாகவே கணிக்கின்றது. 90 களின் நடுப்பகுதியில் ஒசாமா பின்லேடனுக்கு சூடான் அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. தவிர வட உகண்டாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் LRA தீவிரவாத அமைப்புக்கு சூடான் அரசாங்கம் வழங்கிய ஆதரவு என்பன அமெரிக்காவின் சூடான் எதிர்ப்பு நிலைக்குரிய முதன்மைக் காரணிகளாகும்.


ஐ.நா. கண்காணிப்புடன் போர் நிறுத்தம்
ஐ.நா. வினதும் ஆபிரிக்க ஒன்றியத்தினதும் அமைதிப்படைகள் டார்பருக்கு அனுப்பப்பட்டும், அங்கு வன்முறைகள் தணியவில்லை. மாறாக நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

2004 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மூலம் தன்னை சமாதான விரும்பியாக உலகிற்கு காட்டிக்கொண்ட சூடான் அரசு, மறுவளமாக யான்யாவீட் ஒட்டுப்படைகளைக் கையாண்டு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. ஆனபோதும் சூடான் அரசின் இரட்டை நிலைகளை அனைத்துலக சமூகம் சரியாக இனங்கண்டு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தியது எனலாம்.


நிர்ப்பந்தத்தினால் சூடான் விடுதலை அமைப்பு (SLA) உடன்படிக்கை கைச்சாத்து
2006 ஆம் ஆண்டு நைஜீரியத் தலைநகரில் காணப்பட்ட உடன்பாட்டில் SLA முழு விருப்புடன் கையொப்பமிடவில்லை. மாறாக அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான நிபந்தனைகளோடு கையொப்பமிட்டிருந்தது. டார்பரின் ஏனைய போராட்ட அமைப்புகளான JEM (Justice for Equality Movement) மற்றும் SLA அமைப்பிலிருந்து பிரிந்த மற்றுமோர் அமைப்பு ஆகியன ஆபிரிக்க ஒன்றியத்தால் தயாரிக்கப்பட்ட சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்துவிட்டன.

தமது அடிப்படைக் கோரிக்கைகள் உடன்படிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பது அந்த அமைப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டாகும். டார்பர் பிராந்திய மக்களின் உரிமைகள், பாதுகாப்பு, அதிகாரப் பரவலாக்கல் மற்றும் வளப்பங்கீடு போன்ற அடிப்படை அரசியல் பொருளாதார உரிமைகள் சரியான முறையில் உடன்படிக்கை ஆவணத்தில் உள்ளடக்கப்படவில்லை என்று அந்த போராட்ட அமைப்புக்கள் அதனை நிராகரித்தன.

நிர்ப்பந்தத்தின் பேரிலும் மிக மோசமான மனித அவலங்களையும் தடுத்துநிறுத்தும் ஒரே நோக்கத்திற்காகவே தாம் உடன்படிக்கையில் கையொப்பமிட்டதாக SLA அமைப்பு தெரிவித்தது.

டார்பரில் நடைபெறுகின்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் தடுத்துநிறுத்தப்பட வேண்டுமென்ற கருத்துருவாக்கம் மேற்குலக ஊடகங்கள் வாயிலாக பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் மேற்கொள்ளப்படுகின்றன.


அமெரிக்க நலன்
இன்றைய நாட்களில் அமெரிக்காவே, சூடான் விவகாரத்தில் ஐ.நா.வின் நேரடித் தலையீட்டினை அதிகமதிகம் வலியுறுத்துகின்றது. அதனூடாக சூடானில் தனது ஆதிக்கத்தினை (தளம் அமைத்தலை) உறுதிப்படுத்துவது, எண்ணெய் வளத்தினைக் கையகப்படுத்துவது என்ற அமெரிக்காவின் மூலோபாயமும் முக்கியமானதாகின்றது.

அங்கு நிலவுகின்ற மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அக்கறை கொண்டுள்ளது என்ற தோற்றப்பாடு குவிமையம் கொண்டுள்ளது. சூடானில் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்த்தல், அங்கு சமாதானத்தை உருவாக்குதல் என்ற வெளித்தெரியும் நோக்கங்களைத் தாண்டி அமெரிக்காவுக்கும் மேற்கிற்குமான தொலைநோக்குத் தேவைகள் கருத்திற்கொள்ளப்பட்ட "நிகழ்ச்சித்திட்டமும்' உண்டு.


அனைத்துலக சமூகத்தின் தலையீட்டினை அலட்சியப்படுத்தும் சூடான் அரசு
டார்பர் பிரச்சினையை மக்களின் வாழ்வுரிமையுடன் தொடர்புபட்ட அரசியல் பிரச்சினையாக ஏற்பதற்கு சூடான் அரசாங்கம் மறுக்கின்றது. போராட்ட அமைப்புக்களை கொள்ளைக்கூட்டமாக காட்டவே முயற்சிக்கின்றது.

அனைத்துலக சமூகத்தின் தலையீட்டினை சூடான் அரசாங்கம் விரும்பாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தனது அடக்குமுறையின் உண்மை முகம் உலகிற்கு அம்பலமாகிவிடும். ஐநா தலையீட்டினால் சூடான் அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் வெளிவந்து விடுமென்ற அச்சம் காரணமாகவே ஐநா படைகளின் பிரசன்னத்தை சூடான் அரசு கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் அதையும் மீறி அல்-பாஸீர் மீது அனைத்துலக நீதிமன்றம் போர்க்குற்றம் விதித்துள்ளது.

10 வகையான குற்றங்கள்
சூடான் அரசுத்தலைவர் மீது 10 வகையான, அதாவது 10 வௌ;வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. டார்பர் பிரதேசத்தில் வாழும் குரசஇ ஆயளயடவை மற்றும் ணயபாயறய ஆகிய மக்களினங்கள் மீதான இன அழிப்புப் படுகொலைகள் சார்ந்த 3 குற்றங்கள், 2 வெவ்வேறு போர்க்குற்றங்களும், 5 வெவ்வேறு மனித உரிமை மீறல் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.

இன அழிப்பினை, நீதியற்ற போரினை, கொடும் மனித உரிமை மீறல்களை திட்டமிட்டு அவற்றை வழிநடத்தியவர் அல்-பஸீர் என்பதை நம்புவதற்குரிய நியாயமான காரணிகள் இருப்பதாக ஐ.நா பாதுகாப்பு மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க 3 ஆண்டுகளாக டார்பர் நிலைமைகளை விசாரணை செய்த அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின்; புறொசிகூட்டர் (Pசழளநஉரவநச) டுரளை ஆழசநழெ-ழுஉயஅடிழ தெரிவித்துள்ளார்.
இன அழிப்பு, போர்க்குற்றம் சுமத்தப்பட்ட பின்னான விளைவுகள்..?
சூடான் அரசுத்தலைவர் மீதான இந்நடவடிக்கை எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளது.

வன்முறைகளை மேலும் மோசமாக்குமா? அல்- பஸீரை கைதுசெய்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்துவது சாத்தியமானதா? போன்ற கேள்விகளும் எடுகின்றன. அதேவேளை ஐ.நா படைகள் அங்கு நிலைகொண்டிருக்கின்ற புறநிலையில் கைதுகூட சாத்தியமாகக்கூடும். இருந்த போதும் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அனைத்துலக சமூகத்தின் தலையீடு ஏற்படுத்தியிருக்கும் மோசமான, மீள முடியாத தாக்கங்களை பாடமாகக்கொண்டு நோக்கும் போது இவ்வாறான கேள்விகள் இயல்பாக எழுகின்றன.

மக்களினங்கள் மீது காட்டுமிராண்டித்தனமான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இன அழிப்பினை (புநழெஉனைந) அரங்கேற்றிவரும் அரசுகள் மீது, அனைத்துலக சமூகம் கடுமையான நடவடிக்கை எடுப்பது நீதியானதும் வரவேற்கத்தக்கதுமான செயற்பாடாகும். அதே போல அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு பாரிய இனஅழிப்பு போரினை மேற்கொண்டுவரும் சிறிலங்கா போன்ற அரசுகள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனைத்துலக சமூகம் முன்வருமா என்பதுகூட இயல்பாக எழுகின்ற கேள்வியே ஆகும்!

http://www.thinakkural.com/news%5C2008%5C7%5C30%5Carticles_page55421.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக